வட அயர்லாந்தின் அன்ட்ரிம் மாகாணத்தில் உள்ள பால்லிமெனா நகரில் நேற்று இரவு பெரும் கலவரம் வெடித்தது. ஒரு இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 2,500 பேர் திரண்ட போராட்டம் வன்முறையாக மாறியது. காவல்துறை மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டு, நகரம் பெரும் பதட்டத்தில் மூழ்கியுள்ளது.
சனி கிழமை (ஜூன் 7) பால்லிமெனாவின் க்ளோனாவன் டெரஸ் பகுதியில் ஒரு இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் திங்கட்கிழமை காலை கோலரைன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின்போது அவர்கள் ருமேனிய மொழிபெயர்ப்பாளரைக் கோரியது, உள்ளூர் மக்களிடையே கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
இந்த நீதிமன்ற வழக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு அமைதியான போராட்டம் திங்கட்கிழமை மாலை பால்லிமெனாவில் உள்ள ஹாரிவில்லி பகுதியில் தொடங்கியது. நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நகரின் மையப்பகுதிக்கு அருகில் கூடி, லார்ன் தெரு மற்றும் குயின் தெரு வழியாக அணிவகுத்துச் சென்றனர்.
இருப்பினும், இந்த அமைதியான போராட்டம் விரைவிலேயே வன்முறையாக மாறியது. முகமூடி அணிந்த இளைஞர்கள் காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசியதுடன், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். பல வீடுகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் பெல்ஃபாஸ்ட் டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறையினர் கிளாநோவன் டெரஸ் பகுதியின் இரு முனைகளையும் மூடி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகளில், வீடுகளுக்கு அருகில் தீப்பிழம்புகள் எரிவதையும், முகமூடி அணிந்த நபர்கள் காவல்துறையினரை எதிர்கொள்வதையும், பொருட்கள் காவல்துறை வாகனங்கள் மீது வீசப்படுவதையும் காண முடிந்தது.
வட அயர்லாந்து காவல்துறை (PSNI) ஒரு அறிக்கையில், காவல்துறை மீது பல ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. “அனைவரும் அமைதியாகவும் பொறுப்புடனும் இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். வன்முறையும் கலவரமும் மக்களை இன்னும் ஆபத்தில் ஆழ்த்தும்” என்று தலைமை கண்காணிப்பாளர் சூ ஸ்டீன் தெரிவித்துள்ளார். கிளாநோவன் சாலைப் பகுதியைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இளம்பெண்ணுக்கு சிறப்பு அதிகாரிகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தகவல்களைத் தெரிவிக்க அல்லது சந்தேகப்படும்படியான எதையும் கண்டால் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு PSNI பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.