இந்தியாவுடனான ராஜதந்திர மோதலுக்குப் பிறகு தனது சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கும் முக்கிய நடவடிக்கையாக, பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் மாலத்தீவுகளின் சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். மாலத்தீவுகளின் தேசிய சுற்றுலா வாரியம் நேற்று தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது. “எங்கள் உலகளாவிய தூதராக கத்ரீனா கைஃப் இருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையைத் தரும் தருணம்” என அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய தூதராக கத்ரீனா கைஃப் நியமிக்கப்பட்டமை, மாலத்தீவுகளின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இந்திய சுற்றுலாப் பயணிகளால் பெரும் வருவாய் ஈட்டி வந்த மாலத்தீவுகள், சமீபத்திய ராஜதந்திர மோதல்களால் குறிப்பிடத்தக்க இழப்பை சந்தித்தது. இந்த நியமனம், இந்திய சுற்றுலாப் பயணிகளை மீண்டும் ஈர்ப்பதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
முன்னாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டங்கள் தணிந்துள்ளதை குறிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பிராந்தியத்தில் ஒரு முக்கிய நட்பு நாடாக மாலத்தீவுகள் தொடர்வதையும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதையும் இந்த நியமனம் பிரதிபலிக்கிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.