கொலம்பியாவில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடவிருக்கும் பழமைவாத செனட்டர் மிகுவல் உரிபே டர்பே, பொகோட்டாவில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தின்போது சுடப்பட்டு காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபோன்டிபோன் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு பூங்காவில் நடந்த கூட்டத்தில் மர்ம நபர்களால் அவர் பின்னால் சுடப்பட்டார். உள்ளூர் ஊடகங்கள் அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகப் புகாரளித்துள்ளன. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் படங்களில், 39 வயதான அவர் இரத்தம் தோய்ந்த நிலையில், தலையில் காயம் ஏற்பட்டு, பலரால் தாங்கிப் பிடிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. செனட்டரின் நிலை குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ எக்ஸ் தளத்தில், “செனட்டர் மிகுவல் உரிபே மீதான கொலை முயற்சியை அமெரிக்கா மிகக் கடுமையாக கண்டிக்கிறது” என்று கூறியுள்ளார். இடதுசாரி அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை “தூண்டுதல் பேச்சைக் குறைத்து, கொலம்பிய அதிகாரிகளைப் பாதுகாக்க” அவர் வலியுறுத்தினார். “இது ஜனநாயகத்திற்கு நேரடி அச்சுறுத்தல் மற்றும் கொலம்பிய அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் இருந்து வரும் வன்முறை இடதுசாரி சொல்லாட்சியின் விளைவு” என்று ரூபியோ தெரிவித்தார். பெட்ரோ இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார். “வாழ்க்கையை மதியுங்கள், அதுதான் சிவப்பு கோடு” என்று அவர் எழுதினார், மேலும் “சம்பவங்களின் தீவிரத்தன்மை காரணமாக” பிரான்சுக்கு திட்டமிடப்பட்ட பயணத்தை ரத்து செய்தார்.
2026 இல் அதிபர் பதவிக்கு போட்டியிடும் உரிபே டர்பே, கொலம்பியாவின் முன்னணி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார், பத்திரிகையாளர் டயானா டர்பே, 1990 இல் போதைப்பொருள் கடத்தல் தலைவரான பாப்லோ எஸ்கோபார் தலைமையிலான ஆயுதக் குழுவால் கடத்தப்பட்டு, அடுத்த ஆண்டு ஒரு மீட்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார்.பொலிசார் உரிபே டர்பே, கவுன்சில் உறுப்பினர் ஆண்ட்ரெஸ் பாரியோஸ் மற்றும் மேலும் 20 பேருடன் இருந்தபோது சுடப்பட்டதாகத் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறான். ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கொலம்பியாவில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.